Saturday, April 22, 2017

சரீரம் / BODY





தலை,  முகம்,  கண்கள்,   செவிகள்,    வாய்,  உதடுகள்,   நாவு,   கைகள்,    கால்கள்,  பாதங்கள்.
••  தெய்வீக கூடாரமே - என் தேவனின் சந்நிதியே
தேடி ஒடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே...
••  கல்வாரி திருப்பீடமே
கறைபோக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவப் பலியாக
ஒப்புக் கொடுத்தோம் ஐயா...
••  ஈசோப் புல்லால் கழுவும்
இன்றே சுத்தமாவோம்
உறைகின்ற பனிபோல வெண்மையாவோம் ஐயா
உம் திரு வார்த்தையினால்...
••  ஜீவனுள்ள புதிய மார்க்கம்
தந்தீர் ஐயா மாகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே
மகிமையில் நுழைந்து விட்டோம்...
(1).  சகோதரரே, உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக் கொள்கிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.
**  நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தரியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
**  உங்களில் எவனாகிலும் தன்னைக் குறித்து எண்ண வேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின் படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ண வேண்டும்.  (ரோமர் 12:1-3) என்று வேத வசனம் சொல்லுகிறதே - ஸ்தோத்திரம்!
(2).  தேவனே! என் சரீரத்தை பரிசுத்தமும் உமக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக் கொடுக்க இயேசுவின் நாமத்தில் உதவியருளும்.
**  நான் அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருப்பேன்; ஆவியிலே அனலாயிருப்பேன்; கர்த்தருக்கு ஊழியஞ் செய்வேன்.  ஸ்தோத்திரம்! (ரோமர் 12:11)
(3).  தேவனே! என் சுயசரீரத்திற்கு விரோதமாக பாவஞ்செய்யாதபடி, வேசித்தனத்திற்கு விலகியோட இயேசுவின் நாமத்தின் நிமித்தம் காத்தருளும். (1 கொரி6:18)
**  "சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது;  கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர்." (1 கொரி 6:13) என வேத வசனம் தெளிவாக சொல்லுகிறதே - உமக்கு ஸ்தோத்திரம்!
**  உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாய் இருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்ல வென்றும் அறியீர்களா? (1கொரி 6:19) என வேதத்தில் படிக்கிறேனே - ஸ்தோத்திரம்!
**  நம்பிக்கையிலே சந்தோஷமாய் இருப்பேன்; உபத்திரவத்திலே பொறுமையாயிருப்பேன்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருப்பேன்.  (ரோமர் 12:12)
(4).  தேவனே! என் சரீரத்தினால் தீமை செய்யாதபடி விலக்கி இயேசுவின் நாமத்தில் காத்தருளும்.
**  பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவி செய்வேன்; அன்னியரை உபசரிக்க நாடுவேன்.
**  என்னை துன்பப்படுத்துகிற வர்களை ஆசீர்வதிப்பேன்; சபிக்கமாட்டேன்.  ஸ்தோத்திரம்!
(5).  தேவனே! என் சரீரம் தீட்டுப் படாதபடி இயேசுவின் நாமத்தின் நிமித்தம் பாதுகாத்தருளும்.  (லேவி 13:11)
(6).  தேவனே! என் சரீரம் பாவத்தினால் இருளடையாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (மத் 6:23)
**  கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிது; உன் கண் தெளிவாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்.  உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும் (மத் 6:22-23) என வேத வசனம் எச்சரிக்கிறதே - உமக்கு ஸ்தோத்திரம்!
**  கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்;  கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர். (சாமு 22:29) ஸ்தோத்திரம்!
**  என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவரே! ஸ்தோத்திரம்!
**  ஆண்டவரே! நீர் என் விளக்குக்கு ஒளியேற்றுகின்றீர்; என் கடவுளே! நீர் என் இருளை ஒளிமயமாக்குகின்றீர். (சங் 18:28)  ஸ்தோத்திரம்!
**  என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர்; பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென விரித்துள்ளவர். ஸ்தோத்திரம்!
**  "நானே ஒளியை உண்டாக்குகிறேன்; இருளைப் படைக்கிறேன்; நல்வாழ்வை அமைப்பவன் நான்; தீமையைப் படைப்பவனும் நானே; இவை அனைத்தையும் செய்யும் ஆண்டவர் நானே.
**  நான் உனக்கு முன்னே சென்று குன்றுகளைச் சமப்படுத்துவேன்; செப்புக்கதவுகளை உடைத்து, இரும்பு தாழ்ப்பாள்களைத் தகர்ப்பேன்.  இருளில் மறைத்து வைத்த கருவூலங்களையும், மறைவிடங்களில் ஒளித்து வைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன்;  பெயர் சொல்லி உன்னை அழைத்த இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் நானே (ஏசாயா 44: 7,2,3) என வேதத்தில் நீர் சொல்லியுள்ளீர் - உமக்கு நன்றி! கோடாகோடி நன்றி!
(7).  தேவனே! என் சரீரத்தை உலகத்தால் கறைபடாதபடி விலக்கி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (யாக் 1:27)
**  சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுவேன்; அழுகிறவர்களோடே அழுவேன்.  ஸ்தோத்திரம்!
(8). தேவனே! என் சரீரத்தை உலகப்பிரகாரமான சடங்குகளினால் கறைபடாதபடி இயேசுவின் நாமத்தில் விலக்கி காத்தருளும்.  (எபி 9:10)
(9).  தேவனே! என் சரீரத்தை பாவ இச்சைகளினாலே அவமானப் படுத்தாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (ரோம 1:24)
(10).  தேவனே! என் சரீரத்தில் காணப்படும் பெலவீனங்களை நீக்கி ஆரோக்கியத்தை இயேசுவின் நாமத்தில் தந்தருளும்.  (மாற்கு 5:29)
(11).  தேவனே! என் சரீரத்தில் காணப்படும் வியாதிகளை நீக்கி ஆரோக்கியத்தை இயேசுவின் நாமத்தில் தந்தருளும். (மாற்கு 5:29)
(12).  தேவனே! என் சரீரம் பாவத்தினிமித்தம் வியாதியினால் உருவழியாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (நீதி 5:11)
(13).  தேவனே! என் சரீரத்தில் எப்பொழுதும் ஆரோக்கியத்தை உணர இயேசுவின் நாமத்தில் கிருபையருளும்.  (மாற் 5:29)
(14).  தேவனே! என் சரீரத்தை சத்துரு எய்யும் அக்கினி யாஸ்திரங்கள் தாக்காதபடி இயேசுவின் நாமத்தில் பாதுகாத்தருளும். (எபே 6:16)
**  சமாதானத்தின் சுவிசேஷத்திற் குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்துக்கொண்டவனாய் நிற்கின்றேன். ஸ்தோத்திரம்!
**  பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களை யெல்லாம் அவித்துப் போடத்தக்க தாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவனாய் நிற்கின்றேன்.  (எபே 6:16) ஸ்தோத்திரம்!
**  இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக் கொண்டேன். ஸ்தோத்திரம்!
(15).  தேவனே! என் சரீரத்தில் உண்டாகும் பாவசோதனைகளுக்கு விலக்கி இயேசுவின் நாமத்தில் காத்தருளும்.  (லா 4:14)
(16).  தேவனே! உமது ஆவியினால் என் சரீரத்தின் தீய செய்கைகளை அழிக்க இயேசுவின் நாமத்தில் உதவியருளும்.  (ரோமர் 8:13)
(17).  தேவனே! என் மரண சரீரத்தைப் பாவத்திலிருந்து விடுவித்து இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (ரோமர் 7:27)
(18).  தேவனே! சாவுக்கேதுவான என் சரீரத்தில் பாவம் ஆளாதிருக்க இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (ரோமர் 6 :12)
(19).  தேவனே! என் பாவசரீரம் ஒழிந்து  போகும்படி இயேசுவின் நாமத்தில் மன்றாடுகின்றேன்.
(20).  தேவனே! என் சரீரம் பாவத்திற்கு மரித்ததாய் காணப்பட இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (ரோமர் 8:10)
(21).  தேவனே! என் சரீரம் உமக்குரியதாய் இருக்க இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (கொரி 6:13)
(22).  தூய ஆவியானவரே! என் சரீரத்தை இயேசுவின் நாமத்தில் அடக்கி கீழ்படுத்த கிருபையருளும்.  (1 கொரி9:27)
(23).  ஆண்டவராகிய இயேசுவே! என் சரீரத்தை உபவாசத்தினால் உம்முடைய சமுகத்தில் தாழ்த்த கிருபையருளும். (1 இரா 21:27)
(24).  தூய ஆவியானவரே! என் சரீர அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக ஒப்புக்கொடுக்க இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (ரோமர் 6:6)
(25).  தூய ஆவியானவரே! என் சரீரம் கிறிஸ்துவின் சரீரமாக மாற இயேசுவின் நாமத்தில் கிருபையருளும். (1 கொரி 12:27)
(26).  தூய ஆவியானவரே! என் சரீரம் கிறிஸ்துவின் அவயவம் என்னும் அறிவை இயேசுவின் நாமத்தில் தந்தருளும். (1 கொரி6:15)
(27).  தேவனே! என் சரீரத்தைக் குற்றமற்றதாய் காத்துக்கொள்ள இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (1 தெச 5:23)
(28) .  தேவனே! என் சரீரத்தைப் பரிசுத்தமாயும், கனமாயும் ஆண்டு கொள்ள இயேசுவின் நாமத்தில் உதவியருளும்.   (1 தெச 4:5)
**  நான் பரிசுத்தமுள்ளவனாக வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது.  பரிசுத்தத்திற்கே தேவன் என்னை அழைத்திருக்கிறார். (தெச 4:3,7)  ஸ்தோத்திரம்!
**  நாங்கள் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும், மற்றெல்லா மனுஷரிட்த்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் எங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்வாராக!
தூய ஆவியானவரே! எங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும் போது, நாங்கள் எங்கள் பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கும்படி எங்கள் இருதயங்களை இயேசுவின் நாமத்தின் நிமித்தம் ஸ்திரப்படுத்துவீராக! ஸ்தோத்திரம். (தெச 3:12,13)
(29).  தேவனே! என் சரீரத்தின் தேவைகளைக் குறித்து கவலைப்படாதபடி இயேசுவின் நாமத்தில் காத்தருளும். (மத் 6:25)
(30) .  தேவனே! என் சரீரத்தினால் மற்றவர்களுக்கு நன்மை செய்ய இயேசுவின் நாமத்தில் உதவியருளும். (1 கொரி 9:11)
**  கோவிலில் வேலைசெய்வோர் கோவில் வருமானத்திலிருந்தே உணவு பெறுவர்; பீடத்தில் பணி புரிவோர் பலிப்பொருட்களில் பங்கு பெறுவர்.  இது உங்களுக்குத் தெரியாதா?
அவ்வாறே நற்செய்தியை அறிவிக்கிறவர்கள் அந்நற்செய்தியின் மூலமாகவே பிழைப்புக்குரியவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டு மென்று நம் ஆண்டவர் பணித்திருக்கிறார். (1 கொரி 9:13,14) என வேதம் தெளிவாக போதிக்கின்றதே! ஸ்தோத்திரம்!
(31).  சர்வ வல்லமையுள்ள தேவனே! என் சரீரம் பரிசுத்த ஆவியானவர் தங்கியிருக்கும் ஆலயம் என்னும் உணர்வைத் தந்தருளும்.  (1 கொரி6:19) 
(32).  தேவனே! என் சரீரத்தினால் உம்மை எப்பொழுதும் மகிமைப் படுத்த இயேசுவின் நாமத்தின் நிமித்தம் கிருபையருளும். (பிலி 1:20; 1 கொரி 6:20)
(33).  தேவனே! என் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்க இயேசுவின் நாமத்தில் உதவியருளும்.  (மத் 6:22)
(34).  தேவனே! எங்களுடைய சரீரத்தில் உம்முடைய ஜீவன் விளங்கும்படி கிருபையருளும்.  
**  இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்.
இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம். 
ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச்செய்த கடவுள் எங்களையும் அவரோடு உயிர்தெழச்செய்து அவர்திருமுன் நிறுத்துவார். (2 கொரி 4:10,11,14)  ஸ்தோத்திரம்.
(35).  நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி வேறு எதைப் பற்றியும் ஒரு போதும் பெருமை பாராட்ட மாட்டேன்.
அதன் வழியாகவே, என்னைப் பொறுத்தவரையில், உலகம் சிலுவையில் அறையப் பட்டிருக்கிறது.  உலகைப் பொறுத்தவரையில் நானும் சிலுவையில் அறையப் பட்டிருக்கிறேன். 
புதிய படைப்பாவதே இன்றி யமையாதது. 
என் உடலில் உள்ள தழும்புகள் நான் இயேசுவுக்கு அடிமை என்பதற்கு அடையாளம். (கலாத்தியர் 6:14,15, 17)  என்ற வசனத்தின் படியே என்னை புதிய சிருஷ்டியாக்கி கிருபையருளும்.
(36).  தேவனே! என்னுடைய சரீரத்தில் உம்முடைய மரணத்தை சுமந்துதிரிய கிருபையருளும். (2 கொரி 4:10)
(37).  கிறிஸ்துவுக்குக் கீழ்படிவது போல் இவ்வுலகில் எங்கள் தலைவர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தோடும், நடுக்கத்தோடும், முழுமனதோடும் கீழ்படிய இயேசுவின் நாமத்தின் நிமித்தம் உதவி செய்யும். கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமாற நிறைவேற்ற உதவிசெய்யும்.  நல் மனதோடு வேலை செய்ய கிருபை செய்யும்.  (எபே 6:5,6,7)
(38).  அல்லேலூயா! என்நெஞ்சே! ஆண்டவரைப் போற்றிடு; நான் உயிரோடு உள்ளவரை ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் கடவுளை புகழ்ந்து பாடிடுவேன்.
(39).  யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்;  தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறு பெற்றோர்.  ஸ்தோத்திரம்! (சங் 146:1,5)
(40).  ஆண்டவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார். ஸ்தோத்திரம்!
ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்.  ஸ்தோத்திரம்!
என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக!  உடல் கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக.  ஸ்தோத்திரம்!
இயேசுவின் பின்னால் நான் செல்வேன்
திரும்பிப் பார்க்கமாட்டேன்.
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய இரத்தத்தினாலே என்றும் விடுதலையே...
உலகத்தின் பெருமை செல்வத்தின் பற்று எல்லாம் உதறி விட்டேன்
உடல், பொருள், ஆவி உடமைகள் யாவும் ஒப்புக்கொடுத்துவிட்டேன்
நான் அவர் ஆலயம் எனக்குள்ளே இயேசு
என்ன நடந்தாலும் எவ்வேளையிலும் எப்போதும்  துதித்திடுவேன்...

No comments:

Post a Comment

40. அற்புதமாய் கிரியை செய்யும் ஜெபம்.

1. உங்கள் பாவங்களை ஒவ்வொன்றாக அறிக்கை செய்து விட்டு விடுங்கள். 2.  ஆண்டவரை துதித்து ஆராதனை செய்யுங்கள். 3. வேத வாசிப்பு: சங் - 9...